வீடமைப்பு திட்டம் சம்பந்தமாக ஜீவன் தொண்டமான், அமைச்சின் அதிகாரிகள், மருதபாண்டி ராமேஸ்வரனிடையே கருத்தாடல்

மலையக வீடமைப்பு திட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பங்குபற்றலோடு நடைபெற்றது.

கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் பங்குபற்றிருந்தனர்.

அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இந்தியாவின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டம் சம்பந்தமாகவும் கருத்தாடல் இடம்பெற்றது.

வீடமைப்பு திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், வீட்டு திட்டம் பணிகள் விரைவாக நிறைவுபெற முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

Spread the love