விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்கள் விடுதலை

வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துறை கிருஷாந்த் முன்னிலையில் மீனவர்கள் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 12 ஆம் திகதி 16 இந்திய மீனவர்கள் யாழ். வெற்றிலைக்கேணி மற்றும் அனலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் அனலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love