விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு- இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

கடந்த ஐந்து வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விண்ணப்பதாரர்களுக்கு கனேடிய விசாக்கள் கிடைப்பதற்கு ஏற்படும் தாமதம் குறித்து வினவியபோதே கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று, தொற்று நோய்க்கு பின்னர் ஏற்பட்ட தேவைகளின் அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் ஆகிய காரணங்களே இந்த அதிகரிப்புக்கு காரணம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இதுவரை காலமும் இல்லாத அளவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அவசர தேவைக்காக மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வருவதாகவும் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் தீவிரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார். கனடாவுக்கு செல்லுவதற்கான விண்ணப்பிக்க விரும்புவோர் நேர காலத்துடன் விண்ணப்பிக்குமாறும் பயணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக கூறும்படியும் உயர்ஸ்தானிகர் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love