விக்கிரகங்க திருட்டை நிறுத்துங்கள்! யாழ் தளபதியிடம் கேட்கிறார் ஆதீன குரு முதல்வர்

யாழ்ப்பாணத்திலிருந்து இந்து ஆலய விக்கிரகங்கள் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்” என யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள இராணுவத் தளபதியிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி நேற்று சேவ்வாய்க்கிழமை காலை நல்லை ஆதீன குரு முதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர், புதிதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பதவியேற்றுள்ள இராணுவத் தளபதி, என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தார். அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார். தற்போதைய யாழ்.மாவட்ட நிலை தொடர்பில் விளக்கமாக கேட்டறிந்து கொண்டார். மேலும், அண்மையில் யாழ்.மாவட்டத்தில் இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன்.

அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறும் கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வினை பொதுமக்கள் பட்டாசு கொழுத்தி சுதந்திரமாக கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தேன்.

அத்தோடு, தற்போதைய நிலையில் இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது. இது தொடர்ந்தால் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும், அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளையும் இன்றைய சந்திப்பின்போது நான் எடுத்துரைத்தேன். அதற்கு பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி இவை தொடர்பில் தான் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

Spread the love