ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பேரறிவாளன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தில், இந்திய மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக இந்திய மத்திய மற்றும் தமிழ் நாடு மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன. முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படடதுடன், தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதியரசர்கள் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதியரசர்கள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த விடயத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமை சட்டப்படி தவறு.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் படி முடிவுகளை எடுக்க தமிழக ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 142 பிரிவை பயன்படுத்தி இந்திய உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

30 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அமர்வு இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனை பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love