மே மாதம் வெளியாகவுள்ள ‘கோப்ரா’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘கோப்ரா’ மே மாதம் வெளியாகும் என பட இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார். ‘மகான்’ படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இதனை ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.

இதில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, ‘கே ஜி எஃப்’ பட புகழ் நடிகை ஸ்ரீநிதி செட்டி ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் கே எஸ் ரவிக்குமார், மிருணாளினி ரவி, பத்மபிரியா, கனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்திய அணியின் பந்து வீச்சாளரான இர்பான் பதான் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கோப்ரா பட வெளியீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. படத்தின் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வினா எழுப்பியதற்கு பதிலளித்த இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, மே 26-ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதனிடையே சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மகான்’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love