முதலீடும் தொழில்நுட்பமும் வேண்டும் – உலக வங்கியிடம் அமைச்சர் டக்ளஸ்

நிலைபேறான அபிவிருத்தியை வேகமாக அடைவதற்கு தொழில்நுட்பத்தையும், முதலீடுட்டையும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புக்களிடம் எதிர்பார்ப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஆழ்கடல் மீன்பிடி மற்றும் நீர் வேளாண்மையில் மேற்கொள்ளக்கூடிய நிலையான அபிவிருத்தி முகாமை தொடர்பாக உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அறிக்கை நேற்று(03) வெளியிடப்பட்டது.

கொழும்பு, ஷங்ரிலா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு அழைப்பை விடுத்தார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“இலங்கையின் கடற்றொழில், நன்னீர், பருவகால மீன் வளர்ப்பு, கடலட்டை வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை சார்ந்த வளங்களை அடையாளப்படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலம் நிலைபேறான பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது தொடர்பான பல திட்டங்களும் பொறிமுறைகளும் கடற்றொழில் அமைச்சிடம் உள்ளது எனக் கூறிய அவர் தொடர்ந்து “திட்டமிடப்பட்டுள்ள குறித்த பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்ளிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்” என கூறினார்.

“பல்வேறு சவால்களுக்கு மத்தியில், சர்வதேச அமைப்புக்களின் எதிர்பார்ப்புக்களையும், நியமங்களையும் நிறைவேற்றும் வகையில், பலநாள் மீன்பிடிக் கலன்களின் மீன்பிடி முறைகள் உட்பட்ட , கடற்றொழில்சார் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புதிய ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, நன்னீர் மீன்பிடி மற்றும் பருவகால மீன் வளர்ப்பு போன்ற நீர் வேளாண்மை மூலம் தற்போது (நாட்டின்) மொத்த மீன் உற்பத்தியில் 17 வீதத்தித்தினை பெற்றுக்கொள்வதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த கடலுணவு உற்பத்தியில் சுமார் 30 வீதத்தினை நீர் வேளாண்மை ஊடாகப் பெற்றுக் கொள்வதனை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற கடலட்டை ஏற்றுமதிக்கான பண்ணைகளை உருவாக்குவதிலும் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 கடலட்டை கிராமங்கள் ஊடாக சுமார் 355 பண்ணைகளையும், யாழ் மாவட்டத்தில் 19 கடலட்டை ஏற்றுமதிக் கிராமங்களை மூலமாக சுமார் 467 பண்ணைகளையும் உருவாக்கி இருக்கின்றதாக கூறியவர், மேலும் ஆழ்கடல் மீன் பிடியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மயிலிட்டித் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதையும், பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற தேவையான பிரதேசங்களில் புதிய துறைமுகங்களை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் தெளிவுபடுத்தினார்.

Spread the love