பிரிட்டன் பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகிய போரிஸ் ஜான்சன்- ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்பு

பிரிட்டன் பிரதமர் பதவி போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் ரிஷி சுனக்கிற்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது. பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி – பாதீட்டுச் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ்டிரஸ் கடந்த 20 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர் வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷிசுனக் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 142 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர். இதே போன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். 100 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உள்ள போதும் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் நிதி மந்திரியாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love