நாகப்பட்டினத்திற்கு பதிலாக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க தமிழக அரசு

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பட்டினத்திற்கு பதிலாக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான திட்டமாக இந்த யோசனையை தமிழக அரசு முன்வைத்துள்ளது.

இலங்கை – புதுச்சேரி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இருநாட்டு அரசாங்கங்களும் முன்வந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் அணையும் மேடை, பயணிகள் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன புதுச்சேரிக்கு பதிலாக காரைக்காலில் இருந்து கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இந்திய மத்திய அரசு விருப்பம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது.

இதனிடையே, தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக, இராமேஸ்வரம் – தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரம் – காங்கேசன்துறை ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் சட்டசபையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினத்திற்கு பதிலாக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தமிழக அரசு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love