துப்பாக்கிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டார் – ஜோ பைடன்

அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முக்கிய சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். புதிய சட்டத்தின் கீழ், துப்பாக்கி வாங்க விரும்பும் இளையர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும்.  அத்துடன், அச்சுறுத்தலாகக் கருதப்படும் தனிநபர்களை அடையாளங்கண்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை மீட்டுக்கொள்ளும் முன்னெச்சரிக்கை சட்டங்களை இயற்ற மாகாண அரசுகளை அது ஊக்குவிக்கிறது.

அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்தத்துக்கு இந்த வாரம் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் நான் விரும்பும் அனைத்தையும் செய்யவில்லை. எனினும் உயிர்களைக் காப்பாற்ற நீண்ட காலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இது வலுச்சேர்க்கும் என பைடன் ஒப்புக்கொண்டார். கடந்த மே மாதம் நியுயோர்க்கில் உள்ள பபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டேயில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சுட்டில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமெரிக்க அரசாங்கம் ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என நேற்று முன்தினம் சனிக்கிழமை சட்டத்தில் கையெழுத்திட்ட போது ஜனாதிபதி ஜோபைடன் கூறினார். புதிய சட்டத்தின் கீழ் 21 வயதுக்கு குறைவானவர்கள் துப்பாக்கி வாங்குவது கடினமாக அமையும். அவர்கள் பின்னணி குறித்து தீவிரமாக ஆராயப்படும். உளநல மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை துப்பாக்கி வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை முன்னெடுக்க புதிய சட்டத்தின் கீழ் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் நபர்களிடம் இருந்து துப்பாக்கிகளை மீளப்பெறுவதற்கான சட்டங்களை செயற்படுத்த மாகாணங்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்படும். துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெற்ற அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பதைத் தடை செய்வதன் மூலம் குடும்ப சமூக, வன்முறைகளை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிட்டார்.

Spread the love