திருக்கேதீச்சர விவகாரம்: மதத் தலைவர்கள் மத நல்லிணக்கத்தை உறுதி செய்யவேண்டும்

திருக்கேதீச்சரம் – மாதாசொரூப விடயத்தில் மன்னார் ஆயர் உப்பட கத்தோலிக்க சமயத்தலைவர்களும், இந்து மதத்தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீச்சர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடகிழக்கில் குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுகுமிடையே சமய முறுகல் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருக்கேதீச்சர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப பிரச்சினை தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும், இந்து மதத் தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்.

பௌத்த துறவிகளையும் பௌத்தர்களையும் அதிகமாகக் கொண்ட தொல் பொருளியலாளர்கள் வட கிழக்கில் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்குவதை எதிர்க்காதவர்கள். வடகிழக்கில் யுத்த காலத்தில் சமயத் தளங்கள் மீது போடப்பட்ட குண்டுகளால் சேதம்டைந்த வணக்க தலங்கள் தொடர்பிலும், அங்கு கொல்லப்பட்டவர்கள் விடயத்திலும் வருத்தம் தெரிவித்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காதவர்கள் மன்னார் திருக்கேதீச்சர சொரூப விடயத்தில் இந்துக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க போகிறோம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கபட செயலாகும். அரசியல் ரீதியாக தமிழர்கள் சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற காலகட்டத்தில் தமிழர் தாயகத்தில் அகப்பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசாரதேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்தோடு சமய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கவும் இடமளிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.

ஆதலால் தேசிய பிரச்சினைக்கு நீதியை தேடும் வடகிழக்கு ஆயர்கள் சமய உட்பூசல்களுக்கு இடமளிக்காது காலத்திற்கு காலம் தோன்றும் உள்ளக சமய பிரச்சனைகளை தீர்த்திட அடிமட்டத்திலும், மேல் மட்டத்திலும் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான சூழ்நிலை இன்மை காரணமாகவே வெளிச்சக்திகள் உள்நுழைய முயற்சிக்கின்றன. இதனை தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கி தாயக அரசியல் மீட்புக்காக ஒன்றுபட்ட சக்தியாக செயல்படவும் வடகிழக்கு சமயத் தலைவர்களின் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சமய உறவையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கிட அவசரமாக செயற்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love