தமிழ்நாட்டிற்கு சென்று வாழும் இலங்கை தமிழ் மக்கள் நாடு திரும்ப வேண்டும்- அமைச்சர் அலி சப்ரி

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சென்று வாழும் இலங்கை தமிழ் மக்கள் நாடு திரும்ப வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை வடக்கு எம்.பி.க்கள் அதிபருடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையின் போது விரிவாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அலி சப்ரி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து சென்றவர்கள் இரு பிரிவினராக உள்ளனர்.

புனர்வாழ்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தகவல்களின்படி தமிழ் நாட்டில் 106 அகதி முகாம்கள் செயற்பட்டு வருகின்றன. அங்கு 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 435 பேர் வசித்து வருகின்றனர்.

குறிப்பாக படகுகள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள அகதிகள் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2012 ஏப்ரல் வரை விமானம் மூலம் சென்றவர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் அங்கு சென்றவர்கள் அகதி முகாம்களில் பதிவு செய்யப்படவில்லை.

அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 34 ஆயிரம் பேர் தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.

படகுகள் மற்றும் விமானங்கள் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ள இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றார்கள்.

அந்த வகையில் அகதி முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தமாக 92,435 பேர் வசிக்கின்றனர். அவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு தாம் திரும்புவதற்கு விரும்பினால் அவர்கள் அந்த முகாம் பொறுப்பாளரிடம் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறாயினும் நாடு திரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். அவர்களுக்கு எத்தகைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமோ அதனை அரசாங்க மேற்கொள்ளும். எமது உதவி உயர்ஸ்தானிகர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற் கொள்வார் என தெரிவித்துள்ளார். 

Spread the love