தமிழர்களின் பகுதிகளுக்கு சென்று அதில் பௌத்த சின்னங்கள் இருப்பாதாகத் தெரிவிக்கும் தொல்லியல் திணைக்களம்

தமிழர்களுடைய இருப்பை முற்றுமுழுதாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள பௌத்த பேரினவாதம் தொல்லியல் திணைக்களத்தை பயன்படுத்துவதாக  மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக மிகமோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் பேரவையின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக தொல்லியல் திணைக்களம், தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள், தமிழர்களுக்கு சொந்தமான இடங்களை தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலே தொடர்ச்சியாக கையகப்படுத்துகின்றது.

ஒவ்வொருநாளும் தமிழர்களின் பகுதிகளுக்கு சென்று அதில் பௌத்த சின்னங்கள் இருப்பாதாகத் தெரிவித்து, குறித்த பகுதி தொல்லியல் திணைக்களத்திற்கே சொந்தமானது என்று அடாத்தாக பிரதேசங்களை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்காமல், மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி அதனை மழுங்கடிக்கும் செயற்பாடுகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Spread the love