தனது அதிகாரங்களை குறைக்க இணங்கினார் ஜனாதிபதி!

புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினருடன், ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வசம் நிதியமைச்சு இருக்கவேண்டும் என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் 21 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சட்டமா அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடிய நிலையில் அந்த வரைவை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவரைவின்படி, ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து நாடாளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் சரத்துக்களை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வது திருத்தம் என்பது, 19வது திருத்தத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். அதில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் விடயம் உள்ளடக்கப்படவில்லை.

எனினும் அது, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும். அத்துடன் சுதந்திரமான நிறுவனங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை அளிக்கும். இந்தநிலையில் ஜனாதிபதி இந்த அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு உடன்பாட்டை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love