ஜனாதிபதி மாளிகைக்குள் மீட்கப்பட்ட பணம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.5 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிலிருந்து அகற்றப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பினும், இதுவரையில் பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறவில்லையென சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்சகுலரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வாக்குமூலங்களை பதிவு செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தாமதப்படுத்த வேண்டாம் என குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

source from lankasri
Spread the love