சீகிரியா கோட்டை அல்ல பூங்கா : சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர்

சீகிரியா ஒரு கோட்டை அல்ல எனவும், அதனை பூங்காவாக பயன்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

சீகிரியாவை சுற்றுலா மையம் என உலகமே அறியும். எனினும் சீகிரியா தொடர்பான சரியான தகவல்கள் உலகுக்கு செல்லவில்லை. உலக புனித சுற்றுலா கலாசார மையம் என்று சீகிரியாவை பெயரிட்டாலும் அதற்கான முறையான அமைப்பு இல்லை. எனவே அதனை எப்படி செய்வது என்று விவாதிக்கவேண்டும். தொல்லியல் திணைக்களம் மற்றும் கலாசார மைய UNICEF அதிகாரிகள் அனைவரின் பங்குபற்றலுடன் சாதகமானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றது. நாம் அனைவரும் சீகிரியாவை கோட்டை என நினைத்து சீகிரியாவுக்கு செல்கிறோம். சீகிரியா கோட்டை என்றால் ஏன் இவ்வளவு குளங்கள், அழகான மலர் தோட்டங்கள் இருக்கின்றன? 

எனவே, சீகிரியா ஒரு கோட்டை அல்ல, அது ஒரு அழகான ஓய்வு பூங்கா. பேராதனை போலவே, இது அழகுக்காகவும், ஓய்வெடுக்கவும் கூடிய ஓர் இடமாகும். பண்டைய காலத்தில் மன்னரால் கட்டப்பட்ட ஓய்வு பூங்காவாகும். இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Spread the love