சிரியாவிற்கான ஐ.நாவின் முதலாவது நிவாரண தொடரணி

சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நாவின் முதலாவது நிவாரணத் தொடரணி சென்றுள்ளது. சிரியாவின் மேற்கே ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள குறித்த பகுதிக்கு மீளத் திறக்கப்பட்ட எல்லைக் கடவையொன்றினூடாக வாகனங்கள் உள்நுழைந்துள்ளன. துருக்கியின் Bab al-Salameh நகரிலிருந்து குறித்த கடவையினூடாக 11 லொறிகள் நேற்று(14) சிரியாவிற்குள் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு நிலநடுக்கத்தின் பின்னர் உதவிப்பொருட்கள் கிடைக்காமலிருந்ததாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தநிலையில் நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனத் தொடரணி செல்வதற்காக மேலும் 02 கடவைகளைப் பயன்படுத்த சிரிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தக் கடவைகள் 03 மாதங்களுக்கு திறந்திருக்கும் எனவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது. அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 41,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love