குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இருண்ட யுகத்துக்குள் செல்கிறது இலங்கை- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தீவிரமடைந்து வரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் எதிர்காலத்தில் நாடு இருண்ட யுகத்துக்குள் செல்லுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டின் கடுமையான மற்றும் பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆறு முன்மொழிவுகளை பரிந்துரைத்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொது மக்களால் தாங்க முடியாததாகி வரும் பின்னணியில், குறைந்த வருமானம் பெறும் சமூகத்தின் தாக்கம் பாரியளவில் காணப்படுவதாகவும் இதனால் பெரும்பான்மையான மக்களால் பின்வரும் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர். அதாவது, உணவின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்தல் என்பனவாகும். உணவுக்கான செலவைக் குறைப்பது என்பது உணவின் தரத்தைக் குறைப்பதாகும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கிய தாக்கம் குழந்தைகள் மீது இருக்கலாம். சர்வதேச அறிக்கைகளின்படி, தெற்காசியாவில் ஊட்டச்சத்தின்மையில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறான சூழ்நிலைகள் காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்வரும் வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது. தரமான மற்றும் சத்தான உணவைத் தேர்ந்தெடுப்பது குறித்த அடிப்படை அறிவை சமூகத்திற்கு வழங்குவதற்கான தேசிய வேலைத் திட்டத்தை சுகாதார அமைச்சு உடனடியாகக் கொண்டு வர வேண்டும். அங்கு, ஒப்பீட்டளவில் மலிவான மாற்று உணவுகள் மற்றும் தரமான புரத உணவு ஆதாரங்களை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மாகாண, மாவட்ட மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் இடர் குழுக்களை அடையாளம் காண முறையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் அடையாளம் காணப்பட்ட இடர் குழுக்களை இலக்காகக் கொண்ட நடைமுறைத் தலையீடுகளுக்கான வேலைத்திட்டம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு, தரமான புரத மூலத்துடன் கூடிய ஊட்டச்சத்துபை அடங்கிய நிவாரணப் பொதி உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நிவாரணம் வழங்குகிறோம் என்ற போர்வையில், ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பற்ற உணவுகளை ஊக்குவிப்பதை மட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் அபாயத்தை குறைக்கவும் சரியான தொழில்நுட்ப தலையீடு செய்யப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட பாடசாலை மதிய உணவுத் திட்டம் மிகவும் வலுவான மற்றும் நடைமுறைத் திட்டமாக மாற்றப்பட வேண்டும், மேலும் தொடர வேண்டும். ஒட்டுமொத்த உணவு நெருக்கடியை நிர்வகிக்கும் அதே வேளையில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் எதிர்கால தாக்கத்தை குறைக்க, விசேட ஜனாதிபதி செயலணி உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love