கடன் வட்டி வீதங்களை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 3 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் அது, நாணய கொள்கை தளர்வில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சில இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், இறுக்கமான நிதி நிலைமைகள் காரணமாக இறக்குமதி தேவை குறைவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 2023ஆம் ஆண்டில் இலங்கை பணியாளர்களின் ஊடாக ஈட்டும் வெளிநாட்டுப் பணம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சுற்றுலாத்துறையின் வருமானம் 2 தசம் 3 பில்லியனை விடவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.