ஒருநாள் போட்டிதொடரில் இருந்து ஓய்வு கேட்கவில்லை; விராட் கோலி

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா- தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில், விராட் கோலி ஓய்வு கேட்டதை தொடர்ந்து அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின. மேலும், பல்வேறு வதந்திகள் வெளியாகின. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.


தன்னுடைய விளக்கத்தில் நான் டி20 அணி கப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் பேசியிருந்தேன். ஆனால் டெஸ்ட் அணி அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் தலைமை அணி தேர்வாளர் அழைத்து ஒருநாள் கப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக கூறினார். அதற்கு முன் என்னிடம் இதுகுறித்து யாரும் எதுவும் பேசவே இல்லை . கப்டன் பதவிக்கு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை . ரோகித் திறமையான வீரர்,கப்டன் பதவிக்கு தகுதியானவர், நான் இப்போதும் இந்திய அணிக்காக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராகவே இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Spread the love