ஐ.நா வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது இந்தியா

உக்ரைனில் நிலவும் கடும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாட்டினை தீர்மானம் மூலம் நிறைவேற்ற முற்பட்டவேளை 12 ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்தியாவும் எந்த பக்கமும் சாராமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் வரைவு தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்தன. புதன்கிழமையன்று(24), ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்டபோது அவ்வரைபு நிறைவேற்றப்படுவதற்கான போதிய பலம் இல்லாத காரணத்தால் அதாவது ஒன்பது வாக்குகளைப் பெறாத காரணத்தால் , இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனது.

ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன, எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா மற்றும் மீதமுள்ள பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வாக்களிக்காமல் ஒதுங்கியே நின்றனர். நிரந்தர மற்றும் வீட்டோ அதிகாரம் கொண்ட சபையின் உறுப்பினர் நாடான ரஷ்யா, 15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு சபையினை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது.

அதில் ‘மனிதாபிமான உத்தியோகத்தர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய ஆதரவற்ற சூழ்நிலைகளில் உள்ள மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அவ்விதம் உள்ளவர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பான முறையில், விரைவாக, தடையின்றி குறித்த பாதுகாப்பற்ற பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு முறையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும், இந்த முடிவுக்கு மனிதாபிமான இடைநிறுத்தங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ஒப்புதல் கிடைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

உக்ரைன் மீதான  ஆக்கிரமிப்பைப் பற்றி எந்த குறிப்பும் இல்லாத ரஷ்ய தீர்மானமானது, உக்ரைனுக்கு வெளியே அதாவது தாக்குதலினால் பாதிப்புக்குள்ளாகாத   இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக, தடையின்றி வெளியேற்றப்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்றே ரஷ்யா தனது தீர்மானத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த ரஷ்யாவின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு பிறகு மற்ற பாதுகாப்புச்சபை  உறுப்பினர்கள் அறிக்கைகள் வெளியிட்டாலும், இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இதற்கு முன்பு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான தீர்மானங்களுக்கு பாதுகாப்பு சபையில்  இரண்டு முறையும், பொதுச் சபையில் ஒரு முறையும் இந்தியா வாக்களித்திருக்கவில்லை.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ்-கிரீன் பீல்ட் தனது கருத்தை ட்வீட்டரில், இப்படிக்கூறினார் ‘கூட்டாக  எதிர்ப்பு வாக்கெடுப்பில், பாதுகாப்பு சபையின் 13 உறுப்பினர்கள் ரஷ்யாவின் கேலிக்கூத்தான இத்தீர்மானத்தில் இருந்து விலகி, உக்ரைனில் ரஷ்யா உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடி நிலையை  சுட்டிக்காட்டினார். வாக்கெடுப்பு குறித்து விளக்கிய தோமஸ்-கிரீன் பீல்ட், “ரஷ்யா தான் மட்டுமே உருவாக்கிய மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச சமூகத்தைக் கேட்டு ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் துணிச்சலை ரஷ்யா கொண்டிருப்பது உண்மையில் மனசாட்சியற்றதான ஒரு செயற்பாடாகும்  என்று கூறினார்.

அத்துடன் “அமெரிக்கா இந்த விரும்பாத பேச்சுக்களைத் தவிர்க்க விரும்புகிறது, ஏனென்றால், வெளிப்படையாகக் கூற வேண்டுமானால், ரஷ்யாவானது  மிகவும் இக்கட்டான பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகள் பற்றியோ   அல்லது துன்பத்துள் சிக்கித்தவிக்கும்  மில்லியன் கணக்கான உயிர்கள் பற்றியோ மற்றும் அவர்கள்  கனவுகள் சிதைந்து போனது  பற்றியோ எந்தக்கவலையும் படவில்லை. அப்படி அவர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், போரை நிறுத்தி இருப்பார்கள்” 

“ரஷ்யாவானது ஒரு ஆக்கிரமிப்பு செய்யும், தாக்குதல் நடத்தும் ஒரு  நாடு. உக்ரைன் மக்களுக்கு எதிரான மிருகத்தனமான நடவடிக்கைகள்  பிரச்சாரத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது, ஆனால், தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் தானாக  ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அதுவும்  நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறது” என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தின் தூதர் பார்பரா உட்வார்ட், பாதுகாப்புச்சபையோ  அல்லது பொதுச் சபையோ, ரஷ்யாதான் இந்த மனிதாபிமான பேரழிவிற்கு ஒரே காரணம் என்பதை தமது சபைகளில்  அங்கீகரிக்காத எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது நாடு வாக்களிக்காது என்று கூறினார். 

ஐ.நா பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் புதன்கிழமை முன்வைக்கப்பட்ட உக்ரைனின் மனிதாபிமான நிலைமை குறித்த மூன்று தீர்மானங்களில் ஐ.நா பாதுகாப்பு சபையில்  முன்வைக்கப்பட்ட ரஷ்ய தீர்மானமும் ஒன்றாகும்.

ஐ.நா பொதுச் சபை புதன்கிழமை அன்று உக்ரைன் குறித்த அதன் 11வது அவசரகால சிறப்பு அமர்வை மீண்டும் தொடங்கியது. அதற்கு முன் பரிசீலனைக்கு இரண்டு தீர்மானங்கள் இருந்தன. மீண்டும் வியாழன் அன்று 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபை தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“உக்ரேனுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள் பற்றியதான தீர்மானம் அதாவது உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் ஒரு  தீர்மானம், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் விரோதப் போக்கை,  குறிப்பாக பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. மனிதாபிமான உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்  உட்பட பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ள நபர்கள் உட்பட பொதுமக்கள் முழுமையாக பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அது குறிப்பிடுகிறது.

உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உத்தியோகத்தர்களின்  உதவி, அவர்களின் போக்குவரத்து வழிமுறைகள், பொருட்கள் மற்றும் உபகரணங்களை கிடைக்கச்செய்வது, பாதுகாப்பான மற்றும் தடையில்லா அணுகல் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கோருகிறது.

தென்னாபிரிக்காவால் முன்மொழியப்பட்ட மற்ற போட்டித் தீர்மானத்தில் ரஷ்யா பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் பகைமையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அரசியல் உரையாடல், பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்தம் மற்றும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட பிற அமைதி வழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Spread the love