ஐஸ் போதைப்பொருள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் நாட்டில் அமுலிலுள்ள சட்டத்தை கடுமையாக்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்காக ஆபத்தான போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

தற்போது ஐஸ் போதைப்பொருளை கைவசம் வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். 

இந்தநிலையில், புதிய தடுப்புச் சட்டத்திற்கு அமைய 5 கிராம் அல்லது அதைவிட அதிக தொகை ஐஸ் போதைப்பொருளை கைவசம் வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது.

இது தொடர்பில் சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

ஐஸ் போதைப்பொருள் பாவனை, நாட்டில் வேகமாக பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் பிரியங்கிகா அமர்பந்துவிடம் வினவியபோது, ஐஸ் போதைப்பொருளின் பாதிப்பு 225 வீதமாக அதிகரித்துள்ளதாக கூறினார்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்விற்காக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Spread the love