எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகருடன்  சபையில் கடுமையான வாக்குவாதம்

“நீங்கள் சபாநாயகர் அல்ல; அப்பட்டமான பொய்யர்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை பார்த்து தெரிவித்தார்.  ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் நேற்று கடும் வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஜனாதிபதி பதவி விலக தீர்மானித்துள்ளதாக, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார் என சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

113 பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சியை கையளிக்க தயாரென ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லையென சபாநாயகர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம்தாஸ, கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன முன்னிலையில் கூறிய ஒரு விடயத்தை சபாநாயகர் தற்போது மறுக்கிறார். எனவே, சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்றே நான் கூற வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட சபாநாயகர், அது தொடர்பில் சஜித் பிரேமதாஸ் தவறான புரிதலை கொண்டுள்ளதாகவும், அவர் அதனை திரிபுபடுத்திக் கூறுவதாகவும் தெரிவித்தார். இதனை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், தொடர்ந்தும் சபாநாயகர் பொய்யுரைப்பதாகவும், அவர் கூறிய விடயத்தையே தான் இங்கு எவ்வித திரியும் இன்றி முன்வைத்தேன். தற்போது அதனை மாற்றிக் கூறும் நீங்கள் சபாநாயகர் அல்ல:பொய்யர், ஆசனத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடவேண்டாம் என்றார்.

Spread the love