இலங்கை வருகிறது சீன ஆராய்ச்சிக் கப்பல்

சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 (Shi Yan 6) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள குறித்த சீன கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் நவம்பர் மாதம் வரை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன பாதுகாப்பு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமையினால் கடல்சார் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியது. இந்த பின்னணியில் கடல்சார் ஆராய்ச்சி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளமை தொடர்பில், மிகவும் கவலையடைவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்புடைய சீன கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கையில் உள்ள கடல் பாதுகாப்பு நிறுவனமான நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் ஆய்வுக்கு தயாராகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. தென் இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love