இலங்கை அரசவையில் திடீர் மாற்றம்

அமைச்சரவையில் திடீர் மறுசீர்மைப்பை மேற்கொண்டுள்ள அரசாங்கம், இதுவரை அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றியுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதய கம்மன்பில வகித்த எரிசக்தி அமைச்சர் பதவியில் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டார், காமினி லொக்குகே வகித்த மின்சக்தி அமைச்சு பதவி பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவி வகிக்கும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியார் அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் உரையாற்றி இருந்தனர்.

அதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிகும் பங்காளி கட்சிகளின் அமைச்சர்களை அழைக்காது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களை மாத்திரம் அழைத்து நேற்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார். இதன் போது இந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு விமல்வீரவன்ச, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன மற்றும் கம்மன்பில ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source from news 1st
Spread the love