இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தல் – தமிழ் தரப்புகள் கூட்டாக இணைந்து கோரிக்கை

தமிழ்தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை இலங்கை தொடர்பான கோப் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியது. இக்கோரிக்கையில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ.நா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சபையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா? என்ற உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும், இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்திய பொழுது அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பதும், அதே போன்று வடகொரிய நாட்டை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்காக ஐநா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியக் குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமை பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Spread the love