இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இன்று வெளிட்டுள்ள அறிவுறுத்தலில் கோரப்பட்டுள்ளது. பயணக் காப்பீட்டைப் பெறுவதும் அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது.

இலங்கையின் பொருளாதார நிலை பலவீனமாகவே உள்ளது. நிலைமைகள் மோசமடைந்தால் சில தயாரிப்புகள் உதாரணமாக மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் குறைவாகக் கிடைக்கக்கூடும். மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கிடைப்பது, போக்குவரத்து, வணிகம் மற்றும் வணிகச் சேவைகளைப் பாதிக்கலாம். சனநெரிசல் மிகுந்த இடங்களை தவிர்க்குமாறும், இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளுர் ஊடகங்கள் மூலம் முன்னேற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம். நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தநிலையில் உதவி தேவைப்படுமானால் நாட்டின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான தமது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

Spread the love