இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி

இந்தியாவிலிருந்து இரண்டாவது கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் இலங்கை சுங்கத்தினூடாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளின் மாதிரிகள் தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள 10 இலட்சம் முட்டைகள் பண்டிகை கால பயன்பாட்டிற்காக பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளை ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவுபெற்றுள்ளதாக பல்நோக்கு வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

Spread the love