அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக பேரணி

கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.  அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இதேவேளை கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

Spread the love