அமுலுக்கு வரும் புதிய வரிகள்


அந்நியச் செலாவணிப் பிரச்சினையால் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனாலேயே புதிய வரி விதிக்கப்பட்டடது. இன்னும் பல வரிகள் விதிக்கப்படவுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு மிகவும் கடினமான காலமாகும். எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக மக்கள் வரிசைகளில் நிற்பது தெரிகிறது. தற்போது சமையல் எரிவாயுக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அடுத்த எரிவாயு கப்பலில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவைப் பெறமுடியும், அதற்கு 14 நாள்கள் ஆகும். ஆனால் ஒரு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவோம் என்று நம்புகிறோம். எரிபொருளைப் பொறுத்தவரையில் தற்போதைய தேவையில் 50 சதவீதத்தை மட்டுமே தக்கவைக்க முடியும்.

மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பல அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. எங்களிடம் 7 நாள்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளது. ஆனால் இந்த மாதம் 16 ஆம் திகதி 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது. இரண்டு எரிபொருள் தாங்கிகளும் உள்ளன. அடுத்த மாதம் இரண்டு எரிபொருள் தாங்கிகளையும் வாங்க உள்ளோம். அதன்பின், இந்தியாவுடன் கையெழுத்தான புதிய ஒப்பந்தத்தின்படி, 4 மாதங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

எரிபொருளைப் பெறும்போது எங்களுக்கு வெளிநாட்டு நாணயப் பிரச்சினை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினை தொடர்பாக பேசியபோது ஒரு அரசவங்கியிலும் ஒரு ரூபா கூட இல்லை எனவேதான் அமைச்சரவைக்குச் சென்று பணத்தை அச்சிடுவதற்கான ஒப்புதலைப் பெற்றேன். அதனால்தான் புதிய வரி விதிக்கப்பட்டது. இன்னும் பல வரிகளும் விதிக்கப்பட உள்ளன. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபா பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவரவும், அந்நியச்செலாவணிக் கையிருப்பு பிரச்சனையைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகின்றோம் என்றுள்ளது.

Spread the love